பக்கங்கள்

புதன், 20 ஜூன், 2012

யுத்தமில்லாத வாழ்வு வேண்டும்


இந்தியாவும் பிற வளர்ந்த நாடுகளைப் போல் போர்க்களத்தில் பலமிக்க நாடாக வேண்டும் என்று அக்னி ஏவுகணையையும் பிற அணு தொழில்நுட்பங்களிலும் ஆர்வம் செலுத்தியவர் டாக்டர் அப்துல் கலாம்.

வலிமை மிக்க நாடாக இருந்தாலும் நாமாக வலிய போருக்கு செல்வதில் விருப்பம் இல்லாத டாக்டர் அப்துல் கலாம் யுத்தமில்லாத வாழ்வுடன் வளர்ந்த நாடு லட்சியம் பற்றி எழுதியது இதோ.
..

கம்பராமாயணத்தில் மிகவும் பிடித்த பகுதி, வஷிஷ்ட மாமுனிவர் ராமனுக்கு முடிசூடும் விழாவின் முன் அறிவுறுத்திய காவிய அறிவுரை...

யாரொடும் பகை
கொள்ளலன் என்றபின்
போர் ஒடுங்கும்;
புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது;
அது தந்தபின்
வேரொடும் கெடல்
வேண்டல் உண்டாகுமோ?

இதன் அர்த்தம், யாருடனும் பகைமை கொள்ளாவிட்டால், போர் இல்லாத நிலை உண்டாகும். போரின்மையால் மன்னனின் புகழ் மங்காது. மன்னனின் ஆட்சியும், மன்னனின் வாழ்வும் குறைபடாது. போரில்லா நிலைமை ஏற்பட்டுவிட்டால், எந்த ஒரு மன்னர் குலத்தையும் அடியோடு அழிய வேண்டும் என்று சபித்து கொண்டிருக்க மாட்டார்கள்.

போரில்லாத நாடு உலக அமைதிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கம்பனின் கவிதை எல்லோருக்கும் என்ன அருமையாக உணர்த்துகிறது. யுத்தமில்லாத வாழ்வு உலகுக்கு மிக முக்கியம். அந்நிலையை நோக்கி நாம் எல்லோரும் முன்னேற வேண்டும். இதேபோல் பயங்கரவாத நிகழ்வுகள் நடந்துவரும் இந்நாட்களில் அமைதியான சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் அனைவரும் செயல்பட வேண்டும்.

இறைவன் மனித குலத்தை சிந்திக்கும் திறனுடன் படைத்திருக்கிறார். இந்த சிந்திக்கும் திறனையும் ஆராய்ந்து உணரும் வலிமையையும் வளர்த்துக் கொண்டு மனிதன் தெய்வீக தன்மையை அடையலாம் என்பது உன் ஆணை. இது மனித வாழ்வின் லட்சியம். ஒவ்வொரு மனிதனுக்கும் மனிதகுல வரலாற்றில் ஒரு பக்கம் உண்டு. அந்த பக்கத்தை அனைவரும் புரட்டி பார்க்கும்படி சிறப்பிப்பது உங்களது செயல்களைப் பொறுத்தது.

கனவு
என்றன்று நாம் கணித்த
விமானங்கள், பூமியதிர யதிர
பாரிமா நகர் விண்ணில் இடியிடிந்த
மின்னலென ஏவுவோம்
கனவுகள் நனவாகும், நம்முள்ளங்கள்
ஒன்றுபட்டு உழைத்து உயர்வு காணில்

என்ற எனது கவிதை நாம் கனவு காண்பதை வலியுறுத்துகின்து. நாம் பேசினால் மட்டுமே போதாது. ஒவ்வொருவரும் செயலில் இறங்க வேண்டும். நீங்கள் அனைவரும் இன்றைக்கு ஒரு பக்கத்தில் எழுதிக் கொள்ளுங்கள். எந்த செயலுக்காக நான் நினைக்கப்படுபவனாக இருப்பேன் என்பதை எழுதிக் கொள்ளுங்கள். அந்த செயல் உங்கள் எண்ண வடிவங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து இந்தியாவை வளர்ந்த நாடாக்கும். ஒவ்வொரு திட்டத்துக்கும் செயலுக்கும் எண்ண வடிவமும் செயல்வடிவமும் ஏதுவாக இது அமையும்.

மன எழுச்சி கொண்ட இந்திய இளைஞனே. இந்திய இளைஞியே, இல்லத்தரசிகளே, குடும்பத் தலைவர்களே பூமி தன்னத்தானே சுற்றும் போது, ஒரு நாள் பிறக்கிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றும்போது ஒரு வருடம் பிறக்கிறது. வினாடிகள் பறக்கும், மணித்துளிகள் பறக்கும், நாட்கள் பறக்கும், வருடங்கள் பறக்கும் அதை நாம் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் பறக்கும் மணித்துளிகளை நாம் சரியான முறையிலேயே பயன்படுத்திக் கொள்ள தெரிந்து கொள்வோம். நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்து நாட்டை வல்லரசாக்குவதே எனது எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

25 வயதுக்கு குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான். இப்பூவுலகின் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றை கற்றுக் கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்.

சமுதாயத்தில் முக்கியமானவர்களிடமும் பொதுமக்களில் அனைத்து நிலையிலும் உள்ளவர்களிடம் எனது நேர்முக உரையாடல்களில் தேசிய வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளேன். ஆந்திரா, உத்தரபிரதேம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நதி நீர் இணைப்புகள் துவங்கியிருப்பது மிகவும் சாதகமான விஷயம்.

ஒரு முன்னேறிய நாடாக நமது தேசம் 2020க்குள் உருவாக வேண்டுமெனில் அதற்கான அளவீடாக தேச செழுமை குறியீடு உருவாக்கப்பட வேண்டும் என்றும் 2030ம் ஆண்டுக்குள் நம் நாடு முழுமையான எரிசக்தி சுதந்திரத்தை பெற வேண்டும்.

- உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...




- டாக்டர் அப்துல் கலாம் -





ந்த ப திவு  kalvimalar.dinamalar நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக